search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து பலி"

    • ரெயிலில் பயணம் செய்த சுஜன்புடியல் கால் தவறி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மத்தூர்:

    கோவை எக்ஸ்பிரஸில் அசாம் மாநிலம் பகுதியை சேர்ந்த சுஜன் புடியல் வயது (35). இவரது தந்தை பகத்புடியல். இவர்கள் இருவரும் அசாமில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு செல்ல கோவை எக்ஸ்பிரஸில் பயணம் செய்துள்ளனர். அப்போது நேற்று மாலை 5 மணியளவில் ரெயில் சாமல்பட்டி அருகே உள்ள கே.எட்டிப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில் ரெயிலில் பயணம் செய்த சுஜன்புடியல் கால் தவறி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். அதில் அவர் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுஜன்புடியல் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இறப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உடன் இருந்த அவரது தந்தை பகத் புடியலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆபத்தான நிலையில் உள்ள வேகத்தடைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    • வேகத்தடையில் வெள்ளை, கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட வேண்டும்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் சாரங்கபாணி தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது36). கூலித்தொழிலாளி. சேலம், கிழக்கு ராஜபாளையத்தை சேர்ந்த இவர் மனைவி சந்தோஷம் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் தனது 2 மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் சிட்லபாக்கம் சர்வம் மங்கலம் நகர் பகுதியில் சென்றார். அப்போது அங்கு புதியதாக அமைக்கப்பட்டுள்ள வேகத் தடையில் சென்றபோது நிலை தடுமாறி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதினார். இதில் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். கோவிந்த ராஜ் மகன்கள் கண் எதிரிலேயே பரிதாபமாக இறந்தார்.

    அளவுக்கு அதிகமான உயரத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டதும், அதில் வேகத்தடை இருப்பது குறித்து எச்சரிக்கை வர்ணம் பூசப்படாததும் விபத்துக்கு காரணமாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அமைக்கப்பட்ட 5 வேகத்தடைகள் அவசரமாக அகற்றப்பட்டன. மேலும் தாம்பரம், சிட்லப்பாக்கம் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள வேகத்தடைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் விதிமுறை மீறி உள்ள வேகத்தடைகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான வள்ளி என்பவர் பல்லாவரம் பகுதியில் கட்டிடப் பணி செய்துவிட்டு தனது உடன் பணி செய்யும் கொத்தனார் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் அனகாபுத்தூர் நோக்கி சென்ற போது அங்கிருந்த வேகத்தடையால் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயம் அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் வேகத்தடையில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் மாநகராட்சி சாலைகளில் அமைக்கப்படும் வேகத்தடைகளை அகற்ற வேண்டும் அல்லது வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை உள்ளது என தெரிவிக்கும் பலகைகள் மற்றும் வண்ணங்களை தீட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, விபத்துக்களை தவிர்க்க தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

    தரமில்லாத, தேவையற்ற, சீரற்ற வேகத்தடைகளை சோதனை செய்ய தென் சென்னை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷ்னர் தலைமையிலான கமிட்டி உள்ளது.

    இந்த கமிட்டியில் தற்போது ஏற்பட்டுள்ள விபத்து தொடர்பாக கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆலோசிக்க உள்ளனர்.

    இந்த கமிட்டியினர் அனுமதி அளித்த பிறகே வேகத்தடை அமைக்கப்படும். விதிமுறைகளை மீறி இருந்தால் அந்த வேகத்தடை அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறும் போது, போக்குவரத்து போலீசார் அனுமதித்த பிறகே வேகத் தடை அமைக்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் வேகத் தடைகளும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் விதியின் படி சரி செய்யப்படுகின்றது.

    வேகத்தடையில் வெள்ளை, கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட வேண்டும். இரவில் வேகத்தடை இருப்பது தெளிவாக தெரிவதற்காக வேகப் பட்டை செல்லும். வேகத் தடைக்கு முன்பாக 40 மீட்டர் தொலைவில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விபத்தில் மோட்டார் சைக்கிள் சுக்கு நூறாக உடைந்து போனது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 27).

    மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அவினா பேரியை சேர்ந்தவர் மாலை ராஜா(25). இவரது தம்பி சண்முகவேல் (17).

    இவர்கள் 3 பேரும் நாங்குநேரி அருகே உள்ள நெடுங்குளத்தில் தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு நாங்குநேரி பகுதியில் உணவு அருந்தி விட்டு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நெடுங்குளம் நோக்கி சென்றனர்.

    நாங்குநேரி அருகே உள்ள தாளை குளத்தில் நான்கு வழி சாலையை கடக்க முயன்ற போது நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற சொகுசு கார், இரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் மகேஷ் மற்றும் மாலை ராஜா ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    சண்முகவேல் படுகாயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சுக்கு நூறாக உடைந்து போனது.

    விபத்து குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் பயணிகள் ஆட்டோ லாரியின் அடியில் சிக்கிக் கொண்டது.
    • இறந்தவர்கள் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

    ஜீயபுரம்:

    காரைக்காலில் இருந்து சேலம் மாவட்டம் மேச்சேரிக்கு தாது மணல் ஏற்றிக்கொண்டு ஒரு டிப்பர் லாரி புறப்பட்டது. இந்த லாரியை கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த வெள்ளி ராஜா (வயது 42) என்பவர் ஓட்டி சென்றார்.

    இந்த லாரி நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் திருச்சி மாவட்டம் பட்டவாய்த்தலை சக்தி நகர் பகுதியில் வந்த போது அதன் பேரிங் பழுதானது.

    இதனால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி தாறுமாறாக ஓடி வலது புறம் எதிரே வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதி அங்குள்ள அய்யன் வாய்க்கால் ஓரம் கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் பயணிகள் ஆட்டோ லாரியின் அடியில் சிக்கிக் கொண்டது. அதில் பயணம் செய்த திருச்சி திருப்பராய்த்துறை அணலை கீழத் தெருவை சேர்ந்த சுசீலா (60 ), அவரது மகன் சரவணன் (38), ஆட்டோ டிரைவர் அரவிந்த் (34) ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

    இதில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி உயர் தப்பினார். விபத்து நடந்து சிறிது நேரம் கழித்து தான் லாரியின் அடியில் ஆட்டோ சிக்கி இருப்பது தெரியவந்தது.

    லாரியின் ஓரம் ஆட்டோவின் ஒரு சக்கரம் மட்டும் வெளியே தெரிந்தது. அதை வைத்துத்தான் லாரிக்கு அடியில் ஆட்டோ சிக்கியது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த பெட்டவாய்த்தலை போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் லாரியை தூக்கினர். பலியான 3 பேர் உடல்களை மீட்க முயற்சித்தனர்.

    ஆனாலும் உடல்களை முழுமையாக மீட்பதில் சிக்கல் ஏற்பட்டதால் 2 ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு இறந்தவர்கள் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

    இறந்த சுசீலாவுக்கு நேற்று இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவரது மகன் சரவணன் தாயே திருப்பராய்த்துறையில் இருந்து ஒரு ஆட்டோவில் பெட்டவாய்த்தலையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் அதே ஆட்டோவில் வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விசாரணையில் தூக்க கலக்கத்தில் டிரைவர் நவாஸ் காரை, லாரி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிய வந்தது.

    பவானி:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தாராபட வீடு அருகே உள்ள செங்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் கமாதீன் (வயது 65). இவரது மனைவி சுபைதா (62), பேரன் அபுதாகிர் (9), பேத்தி ஆஷிகா (13) ஆகிய 4 பேரும் ஊட்டி செல்வதற்காக நேற்று இரவு காரில் கிளம்பி உள்ளனர்.

    காரை அதே பகுதியைச் சேர்ந்த நவாஸ் (34) என்பவர் ஒட்டி வந்தார். இன்று அதிகாலை 4.45 மணி அளவில் கார் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த லட்சுமி நகர் பவிஸ் பார்க் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    அதிகாலை என்பதால் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அந்தப் பகுதியில் கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது கார் கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் எதிர்பாராத விதமாக மோதியது. காரில் இருந்த அனைவரும் அலறினர்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் விபத்து குறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கமாதீன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் விபத்தில் சுபைதா, ஆஷிகா, அபுதாகிர், டிரைவர் நவாஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். கார் லாரியின் மீது மோதிய வேகத்தில் அப்பளம் போல் நொறுங்கியது.

    பின்னர் அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபுதாகீர் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தூக்க கலக்கத்தில் டிரைவர் நவாஸ் காரை, லாரி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிய வந்தது.

    • சாலை வளைவில் நிலை தடுமாறிய ஆட்டோ அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது.
    • விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்குமாறும் அங்குள்ள டாக்டர்களுக்கு அறிவுருத்தினார்.

    செஞ்சி:

    சென்னையை சேர்ந்த 9 பேர் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஆட்டோவில் வந்தனர். கிரிவலம் முடிந்து தங்களின் குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அருகில் இருந்த தங்களின் உறவினர் வீட்டிற்கு நள்ளிரவு 2.30 மணிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது செஞ்சி அருகேயுள்ள கப்பை என்ற ஊர் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலை வளைவில் நிலை தடுமாறிய ஆட்டோ அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. ஆட்டோவில் பயணித்தவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டனர். இதில் ஆட்டோ டிரைவர் யுவராஜ், சத்யா ஆகியோர் உட்பட உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். யுவராஜின் மகன்கள் பிரதீஸ்வரன் (வயது 11), ஹரி பிரசாத் (வயது 7) ஆகியோர் கிணற்றில் மூழ்கி இறந்து போனார்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் படுகாயம் அடைந்து செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து விபத்தில் இறந்து போன 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவு பெற்றுள்ளதாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

    மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறும் அங்குள்ள டாக்டர்களுக்கு அறிவுருத்தினார். அப்போது செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், தாசில்தார் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஆட்டோவில் சென்ற அனைவரும் கிணற்றில் விழுந்தனர்.
    • ஆட்டோ கவிழ்ந்து 2 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செஞ்சி:

    சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு மகன் யுவராஜ் (வயது 40). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். இவர் நேற்று திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலத்திற்காக தனது மனைவி சத்யா (35) மகன்கள் பிரகதீஸ்வரன் (11), அரிப்பிரசாத் (7) மற்றும் உறவினர்களுடன் சென்றார்.

    திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துவிட்டு, யுவராஜின் உறவினரான சென்னை குன்றத்துரை சேர்ந்த கலிவரதன் மகன் உத்தரகுமார் (30), அவரது மனைவி உறவினர்கள் என மொத்தம் 9 பேர் சென்னை செல்ல திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டனர். வீடு திரும்பும் வழியில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள புலி வந்தி கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டனர். இதனை தொடர்ந்து யுவராஜின் மாமியார் வீடு உள்ள கப்பை கிராமத்திற்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர்.

    இன்று அதிகாலை 2.30 மணியளவில் கப்பை கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு திருப்பத்தில் வந்த போது திடீரென ஆட்டோ நிலை தடுமாறி பக்கத்தில் உள்ள கிணற்றில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் சென்ற அனைவரும் கிணற்றில் விழுந்தனர். இதில் ஒரு சிலர் பக்கத்தில் உள்ள படிக்கட்டுகளை பிடித்து வந்து மேலே ஏறி சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, மீதம் இருந்தவர்களை கிணற்றில் இருந்து மீட்டு அவர்களை சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் யுவராஜின் 2 குழந்தைகளை மீட்க முடியாததால், செஞ்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சுமார் 2 மணி நேரம் போராடி கிணற்றில் மூழ்கி இறந்த 2 குழந்தைகளின் உடலை மீட்டனர். தொடர்ந்து அங்கு வந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கிணற்றில் மூழ்கி இறந்த பிரகதீஸ்வரன், அரிபிரசாத் ஆகியோரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யுவராஜ், அவரது மனைவி சத்யா, உத்தரகுமார், அவரது மனைவி பொன்னி (20), மற்றும் உறவினர்களான பாஞ்சாலி (50), அம்மச்சி (50), அம்மச்சியின் மகன் ஆகாஷ் (18) ஆகிய 7 பேரிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுவிட்டு, குலதெய்வம் கோவிலில் வழிபட்டு வீடு திரும்பிய போது, ஆட்டோ கவிழ்ந்து 2 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • படுகாயம் அடைந்த நேஹா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    கர்நாடகா மாநிலம், பெங்களூர் ஸ்டெர்லிங் குரூப் அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் தன்னுஜ் (வயது 36). இவரது மனைவி நேஹா (35). தம்பதியினருக்கு டக்ஸ் (4) என்ற குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவி இருவரும் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்தனர்.

    தம்பதியினர் குழந்தையுடன் இன்று அதிகாலை கார் மூலம் பெங்களூர் நோக்கி சென்றனர். காரை தன்னுஜ் ஓட்டினார்.

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பைனப்பள்ளி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தறிகெட்டு ஓடியது. சாலையோரம் இருந்த விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் படுகாயம் அடைந்த நேஹா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை மற்றும் தன்னுஜ் ஆகிய 2 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    நேஹா பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
    • கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள செம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி அன்ன ஜெமிலா (வயது 60). இவரது மகள் சகாய ஜூலி (25).

    இவர்கள் 2 பேரும் நேற்று அதே பகுதியை சேர்ந்த மதியழகன் (60) என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் அன்ன ஜெமிலாவின் மற்றொரு மகளை திசையன்விளை அருகே உள்ள அதிசயபுரத்தில் அவரது வீட்டில் விட்டுவிட்டு மாலையில் ஊருக்கு திரும்பினர்.

    அப்போது திசையன்விளை புறவழிச்சாலை அருகில் இசக்கியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் சென்றபோது, எதிரே உவரியை சேர்ந்த செல்வக்குமார் என்பவரது மகன் பிபின்குமார்(20) ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக ஆட்டோவின் மீது நேருக்கு நேர் மோதியது.


    இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோவின் இடிபாடுகளில் சிக்கி 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்திலேயே மதியழகனும், அன்ன ஜெமிலாவும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    படுகாயம் அடைந்த சகாய ஜூலிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திசையன்விளை கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மார்த்தாண்டம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் பொய்யாப்பாக்கம் புதுக்காலனியை சேர்ந்தவர் ராஜி (வயது 32).

    இவரும் பில்லூர் பள்ளிக் கூட தெருவை சேர்ந்த பிரபாகரனும் மோட்டார் சைக்கிளில் முண்டியம்பாக்கத்திற்கு சென்றனர். அங்கு நடைபெற்ற உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்று நேற்று இரவு வீடு திரும்பினர்.

    முண்டியம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டிலிருந்து, தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல முற்பட்டனர். அப்போது சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார், சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் மூலமாக இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் சென்ற வழியிலேயே ராஜி உயிரிழந்தார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த பிரபாகரன் இன்று அதிகாலை உயிரிழந்தார். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
    • இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் மகன் பழனிச்சாமி (வயது 23). இவர் படித்து முடித்த பின்னர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் தனது பெற்றோரை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    இவரது உறவினர் தம்பி பட்டியை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் சக்தி (16). இவர் திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து விட்டு பின்னர் கல்வியை தொடரவில்லை. இந்தநிலையில் நேற்று இரவு பழனிச்சாமி, இவரை அழைத்துக் கொண்டு, ஊர்குளத்தான் பட்டியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி நோக்கி தபால்துறைக்கு சொந்தமான அஞ்சலக வாகனம் சென்றது.

    அந்த வாகனம் மணமேல்பட்டி விலக்கு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து ஒரு வளைவில் திரும்பியபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக இருவரையும் நெடுஞ்சாலைதுறை ரோந்து வாகனம் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    • குழந்தை ரக்சின் வேனின் முன் சக்கரத்தில் சிக்கிக்கொண்டான்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் இருந்து தனியார் பள்ளி வேன் ஒன்று இன்று காலை மாம்பட்டு கிராமத்துக்கு சென்றது. வேனை மாம்பட்டு மேற்கு தெருவை சேர்ந்த கயலங்குமார் (வயது 35) என்பவர் ஒட்டி வந்தார்.

    மேல் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் என்ற சவுந்தர்ராஜன். முந்திரி வியாபாரி. இவர் வீட்டின் முன்பு வேன் நின்றது. முந்திரி வியாபாரியின் மனைவி வசந்தி யு.கே.ஜி. படிக்கும் தனது மூத்த மகன் ரவிக்குமாரை வேனில் பத்திரமாக ஏற்றினார். ரவிக்குமார் ஏறியவுடன் பள்ளி வேன் அங்கிருந்து புறப்பட்டது.

    அப்போது எதிர்பாராத விதமாக தாயாரோடு அங்கு நின்று கொண்டிருந்த 2-வது மகன் ஒன்றரை வயது குழந்தை ரக்சின் வேனின் முன் சக்கரத்தில் சிக்கிக்கொண்டான். இதில் படுகாயமடைந்த சிறுவன் ரக்க்ஷினை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தன் கண்முன்னே உடல் நசுங்கி பலியான குழந்தையை பார்த்து தாய் கதறி அழுத காட்சி அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×